தாய்லாந்தில் இத்தாலிய பிரஜைகளின் மோசமான நடத்தை – தூதரகம் மன்னிப்பு கோரியது
05 இத்தாலிய பிரஜைகள் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் பெண் ஒருவரிடம் ஆபாசமான சமிக்ஞைகளை காட்டும் காணொளி வைரலாகியதைத் தொடர்ந்து இத்தாலிய தூதரகம் மன்னிப்பு கோரியுள்ளது.
பாங்காக் மெட்ரோ ரயிலில் பயணித்த சுகாஸ் என்ற பெண் குறித்த ஐந்து பேரிடமும் சத்தத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த ஐவரும் அந்த பெண்ணிடம் நடுவிரலை காட்டி அநாகரிகமாக நடந்துக்கொண்டுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்ரே பெருநகர காவல் நிலையத்தில் குறித்த பெண் முறையிட்டதுடன், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு 1000 பாட் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் ஒரு மாணவருக்கு அநாகரிகமான செயலுக்காக கூடுதலாக 1,000 பாட் அபராதம் விதிக்கப்பட்டது.
இரு தரப்பினரும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளைக் கைவிடவும், இது தொடர்பான அனைத்து உள்ளடக்கங்களையும் சமூக ஊடகங்களில் இருந்து அகற்றவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி வைரலாகியதைத் தொடர்ந்து இத்தாலிய தூதரகம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.





