இந்தியாவில் இருமல் மருந்துகளை வாங்குவோருக்கு எச்சரிக்கை – பற்றுச்சீட்டு அவசியம்
இந்திய அரசாங்கம் இருமலுக்கான மருந்துகளை வாங்கும்போது மருத்துவரின் பற்றுச்சீட்டு அல்லது பரிந்துரை சீட்டு காண்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்திய பல குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருந்து இருமல் மருந்துகளை நீக்குவதற்காக சுகாதார அமைச்சகம் விதிகளைத் திருத்தியுள்ளது.
இந்த விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளன.
பல நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உலகளவில் கிட்டத்தட்ட 300 இறப்புகளுடன் தொடர்புடைய ஏழு இந்தியத் தயாரிப்பு மருந்துகளை உலக சுகாதார அமைப்பு (WHO) சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில், கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் கடந்த ஆண்டு குறைந்தது 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில், மூலப்பொருட்களைப் பெறுவதிலும் தரக்கட்டுப்பாட்டிலும் ஏற்பட்ட குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. இது நாட்டின் மருந்து கட்டுப்பாட்டாளரை கடுமையான விதிமுறைகளை உருவாக்கத் தூண்டியது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த சிரப்பில், 48.6 சதவிகிதம் நச்சுத்தன்மையுள்ள டையெத்திலீன் கிளைக்கால் என்ற மாசுபடுத்தி இருப்பது கண்டறியப்பட்டது. இது சிறுநீரக செயலிழப்புடன் தொடர்புடைய ஒரு தொழில்துறை கரைப்பான் ஆகும். இதுவும் மருந்துகளில் சேர்க்கப்பட்டிருந்தது.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் (Dextromethorphan syrup) சிரப்பை உட்கொண்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவங்கள் பரவலான மக்கள் சீற்றத்தைத் தூண்டி, அரசாங்க விசாரணைக்கு வழிவகுத்தன.





