ஆயுத கையிருப்பை நிரப்பும் முயற்சியில் அமெரிக்கா – ரேதியான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாலும், தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளாலும் குறைந்துபோன உயர் தொழில்நுட்ப ஆயுதங்களின் இருப்பை மீண்டும் நிரப்பும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகளின் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரிப்பதற்காக, RTX நிறுவனத்தின் ஒரு பிரிவான ரேதியான் Raytheon நிறுவனத்திற்கு அமெரிக்க இராணுவம் 22.9 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
தற்போது ஆண்டுக்கு சுமார் 60 ஏவுகணைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் ரேதியான் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது வருடாந்திர டோமாஹாக் உற்பத்தியை 1,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளாக உயர்த்த முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் துல்லியமாக வழிநடத்தப்படும் வெடிமருந்துகளின் கையிருப்பு குறைந்து வருவது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், வொஷிங்டன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
டோமஹாக் என்பது அமெரிக்க கடற்படையின் நீண்ட தூர தாக்குதல் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
இந்த ஏவுகணையை மேற்பரப்புக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டிலிருந்தும் ஏவ முடியும், மேலும் இது நீண்ட தூரத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





