மத்தியதரைக் கடலில் இயங்கிய ஆட்கடத்தல் வலையமைப்பை முறியடித்த ஸ்பெயின்
மத்தியதரைக் கடலில் இயங்கி வந்த மிகப்பெரிய ஆட்கடத்தல் வலையமைப்புகளில் ஒன்றை முறியடித்துள்ளதாக ஸ்பெயின் பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.
இந்த வலையமைப்பு 2,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நாட்டிற்குள் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது.
இது தொடர்பில் ஸ்பெயினின் குடிமைப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்தியதரைக் கடலில் இதுவரை கண்டறியப்பட்ட மிகவும் சிக்கலான, தீவிரமான மற்றும் ஆபத்தான பன்னாட்டு குற்ற வலையமைப்புகளில் ஒன்றை, குடிமைப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய காவல்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
MDMA போன்ற போதைப்பொருட்களுக்கான தேவை அதிகமாக உள்ள வட ஆப்பிரிக்கா முழுவதும் விநியோகிப்பதற்காக, இந்த வலையமைப்பு ஸ்பெயினிலிருந்து அல்ஜீரியாவிற்கு செயற்கை போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல அதிவேகப் படகுகளைப் பயன்படுத்தியுள்ளது.
திரும்பும் பயணத்தில், அது புலம்பெயர்ந்தோரை ஸ்பெயினின் தென்கிழக்குக் கடற்கரைக்கும் இபிசா தீவிற்கும் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் கப்பல்களைப் பாதுகாக்கக் கடுமையான வன்முறையைப் பயன்படுத்திய இந்தக் குழு, குறைந்தது 64 கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, 24 மில்லியன் யூரோ (27 மில்லியன் டாலர்) லாபம் ஈட்டியதாகக் காவல்துறை நம்புகிறது.
கடந்த வாரம் ஸ்பெயினின் செவுட்டா பகுதியில் புலம்பெயர்ந்தோர் அத்துமீறி குடியேறியதை தொடர்ந்து எல்லைப்பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஐரோப்பிய நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த வலையமைப்பு பிடிப்பட்டுள்ளது.




