துருக்கி, பாகிஸ்தானுடன் சவுதி ஒப்பந்தம்: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவிற்கு பாதுகாப்பைத் தராது என்று ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி எச்சரித்துள்ளார்.
ரியாத் தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேற்படி மூன்று நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இப்ராஹிம் ரெஸாயி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான வெறும் காகித அளவிலான ஒப்பந்தம் தங்களுக்குப் பாதுகாப்பைக் கொண்டு வராது என்பதை சவுதி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.
பல ஆண்டுகளாக அமெரிக்காவை மட்டுமே ஒருதலைப்பட்சமாக நம்பியிருந்தது அவர்களுக்குப் பாதுகாப்பைத் தரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மற்றவர்களிடம் பாதுகாப்பிற்காக பிச்சையெடுக்கும் நிலையைத் தவிர்க்க, உங்கள் கொள்கைகளை சீர்திருத்திக் கொள்ளுங்கள்,” என்றும் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணைக்குழுவின் உறுப்பினரான ரெஸாயி வலியுறுத்தியுள்ளார்.




