ICC நீதிமன்ற அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை – ஆதரவாக களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விசாரிக்கும் உயர் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஐசிசி நீதிமன்றத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
“உலகின் மிகக் கொடூரமான சில குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உதவுகிறது,” என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
“இந்த அத்தியாவசியப் பணியைச் செய்வதற்கு, அதன் நீதிபதிகளும் அதிகாரிகளும் சுதந்திரமாகவும் வெளிப்புற அழுத்தமின்றியும் செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும்,” என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவரான ஜப்பானின் டோமோகோ அகானே Tomoko Akane மற்றும் காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செனகலின் மூத்த வழக்கறிஞர் அப்துலாயே சேயே Abdoulaye Seye ஆகியோர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது.
நெதர்லாந்து அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தது. அத்துடன் தனது அரசாங்கம் இந்த தடைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டது.
அத்துடன் இந்தத் தடைகள் நீதிமன்றத்தின் சுதந்திரத்தின் மீதான “அப்பட்டமான தாக்குதல்” என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விவரித்துள்ளது.
அதேநேரம் ஜெர்மன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவரும், பெர்லின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஆதரவாக நிற்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், அந்த நீதிமன்றம் “மிகக் கொடிய குற்றங்களைச் செய்தவர்களைப் பொறுப்பேற்க வைத்துள்ளது” என்றும், “தனது நோக்கத்தை மிகச் சரியாக நிறைவேற்றி வருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்கா ஏற்கனவே, நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் உட்பட 11 உயர் நீதிமன்ற அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,




