10,000 தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இன்று இரண்டு முக்கிய தொழிலாளர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
முறையான மற்றும் வெளிப்படையான வேலைவாய்ப்பு கட்டமைப்பின் கீழ் ஆரம்பகட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு வழிவகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
பாங்காக் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜூலாபுன் அமோர்ன்விவாட் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், ஒப்பந்தங்களின் அமுலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைக்குமாறு விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இலங்கை இளைஞர்களுக்கு விரிவான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை புதிய கட்டமைப்பின் கீழ் பணியமர்த்தப்படும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், சலுகைகள் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட தாய்லாந்தின் தொழிலாளர் சட்டத்தின் கீழ் சம உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்படும் என்று தாய்லாந்து தொழிலாளர் துறை அமைச்சர் ஜூலாபுன் தெரிவித்தார்.





