தென்னாப்பிரிக்காவில் கோர விபத்து – 21 பேர் பலி
தென்னாப்பிரிக்காவின் முக்கிய நெடுஞ்சாலையில் இரண்டு மினிபஸ் டாக்சிகள் மற்றும் மற்றொரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் இன்று அறிவித்தனர்.
சாலைப் போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தின் தகவலின்படி, கேப் டவுனுக்கு கிழக்கே சுமார் 380 கிலோமீட்டர் (236 மைல்) தொலைவில் உள்ள பிரின்ஸ் ஆல்பர்ட் மற்றும் லீயு-காம்கா (Leeu-Gamka) இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
“வெஸ்டர்ன் கேப்பில் உள்ள அவசர சேவைகள் மற்றும் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முதலில் இரு மினிபஸ்கள் மோதிக் கொண்டதாகவும், பின்னர் அவை மற்றொரு எஸ்யூவி (SUV) வாகனம் மீது மோதியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சாலைப் போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




