இறையாண்மை மீறல் – நெதன்யாகுவின் சிரிய பயணத்தை விமர்சிக்கும் சவுதி அரேபியா
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிரியாவிற்குள் நுழைந்துள்ளதை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் சவுதி செய்தி நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள தகவலில், சிரியாவின் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு நெதன்யாகு மேற்கொண்ட பயணம், “அந்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் அப்பட்டமான மீறல் மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், சிரியப் பிராந்தியத்திற்கு எதிரான இஸ்ரேலிய மீறல்களையும் அத்துமீறல்களையும் நிறுத்துவதுடன், 1974-ஆம் ஆண்டு படைகளை விலக்கிக் கொள்ளும் ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதும் முக்கியம்” என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த புதன் கிழமை பெஞ்சமின் நெதன்யாகு தனது படைகளுடன், இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியான ஜபல் அல்-ஷேக்கிற்கு Jabal al-Sheikh பயணம் செய்திருந்தார்.
அங்கு, ஜபல் அல்-ஷேக்கிலிருந்து யர்மூக் நதி வரை பரவியுள்ள பகுதியில் இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத “முழுமையான கட்டுப்பாட்டை” நிறுவியுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தப் பயணத்தை தனது இறையாண்மையின் சட்டவிரோத மீறல் என சிரிய வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.




