21 ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்
தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி யாழ். மயிலிட்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இந்தத் தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வரும் தமது பூர்வீக நிலங்களை இந்த மாதமாவது விடுவித்து, தங்களை மீள்குடியேற்ற அரசும் அரச அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தீவிரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல வாரங்களாகத் தொடர் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்த போதிலும், தமது கோரிக்கைக்கு இதுவரை முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால சந்ததியினரின் உரிமைகளுடன் தொடர்புடைய பூர்வீக நிலங்களை மீளப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ள மக்கள், 21 வாரங்களாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கி, நிலங்களை மீள வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.




