இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புக்கு ஆதரவு – அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் பெண்
‘இஸ்லாமிக் ஸ்டேட்’ (Islamic State) அமைப்புக்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு “அந்நிய பயங்கரவாதிகளை” (alien terrorists) வெளியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட, அதிகம் அறியப்படாத நீதிமன்றத்தின் மூலம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
குறித்த நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முதல் வழக்கு இதுவாகும்.
டெக்சாஸில் சட்டப்பூர்வ நிரந்தரக் குடியேறியாக வசித்து வந்த 47 வயதான நசிரா ஹாஜி ஜாதா (Nazira Haji Zada), ஜூலை மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘அந்நிய பயங்கரவாதி வெளியேற்ற நீதிமன்றத்தில்’ (Alien Terrorist Removal Court) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது சந்தேகநபர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதுடன், வெளியேற்ற நடவடிக்கையை எதிர்த்துப் போராடப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 1996-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டதிலிருந்து பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு நீதிமன்றத்தில் அவரது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வெளியேற்ற வழக்குகளில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட அந்த நீதிமன்றம் அரசுக்கு அனுமதிக்கிறது.
இந்த ரகசிய நடைமுறை தனது சட்டரீதியான உரிமைகளை (due process rights) மீறுவதாக அவரது வழக்கறிஞர் ஆரம்பத்தில் வாதிட்டார்.
இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ரகசிய ஆதாரங்களைப் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




