ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 மாலுமிகளை மீட்க ஐ.நா அவசரக் கோரிக்கை
ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 மாலுமிகளை மீட்டுத் தாயகம் திரும்ப உதவுமாறு, மத்தியக்கிழக்கில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த நீர்வழியில் “கடுமையான மனிதாபிமான மற்றும் மனித உரிமை நெருக்கடியை” எதிர்கொண்டுள்ள, ஆயிரக்கணக்கான மாலுமிகளின் அவல நிலையைச் சரிசெய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர், வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஷபியா மன்டூ கூறினார்.
ஜெனீவாவில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தின் போது வெளியேற முடியாமல், நூற்றுக்கணக்கான கப்பல்களில் குறைந்தது 6,000 மாலுமிகள் அந்த ஜலசந்தியில் சிக்கித் தவிப்பதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து ஐ.நா அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
“சிக்கித் தவிக்கும் மாலுமிகள் பாதுகாப்பாக வெளியேறி கப்பலிலிருந்து இறங்குவதற்கு வழிவகை செய்யவும், அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் அவசரமாகப் பணியாற்ற வேண்டும்,” என்று வோல்கர் டர்க் வலியுறுத்தியதாகவும் மன்டூ தெரிவித்துள்ளார்.
“பொதுமக்கள், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, அவை நிறுத்தப்பட வேண்டும். அவை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.”
தூதரக உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், மேலும் அவர்களை வெளியேற்றுவதற்கும் தாயகம் திரும்புவதற்கும் வசதி செய்தல் உள்ளிட்டவற்றின் மூலம், “சிக்கித் தவிக்கும் மாலுமிகளின் பாதுகாப்பை அவசரமாக உறுதி செய்யுமாறு” அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்டூ மேலும் கூறியுள்ளார்.




