இலங்கையில் களமிறங்கினார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சிறப்பு விமானத்தில் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
எதிர்வரும் 10 திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தக் காலகட்டத்தில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.




