அரிசோனாவில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் படுகாயம்
அரிசோனாவின் (Arizona) டக்சன் (Tucson) நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள வணிகப் பகுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் சந்தேகநபர் உட்பட 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில், பொலிஸ் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தாக்குதல்தாரியை எதிர்கொண்ட பொலிஸார் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் உள்ளுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பலருக்கு கை கால்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரவில் ஏராளமான மக்கள் தெருக்களில் கூடியிருந்த சூழலில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.





