ஜனநாயகத்துக்காக ரணில், சஜித் சங்கமம்: எதிரணி தலைவர்களும் ஒன்றிணைவு
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து தோற்கடிப்போம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரதான எதிர்க்கட்சிகள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (23) விசேட கூட்டம் ஒன்றை நடத்தின.
இதன்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார்.
“ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே எதிரணிகள் அனைத்தும் இன்று ஒன்றுபட்டுள்ளன. இதுவே எமது பிரதான பொது நோக்கமாகும். இந்த அடிப்படை விடயங்களுக்காக நாமனைவரும் இணைந்து பயணிப்போம்” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட எதிரணியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.





