கடும் வறட்சி – அம்பாறையில் 09 நீர்பாசனக் குளங்களின் நீர்மட்டம் குறைவு
கடும் வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் இன்று (06) நிலவரப்படி 21.5% ஆகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டமும் 25.3% ஆகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியானது, பல மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து கடுமையாகப் பாதித்து வருகிறது.
இத்தகைய பின்னணியில், பொலன்னறுவை மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் மழை பெய்து, வறட்சியிலிருந்து ஓரளவு நிவாரணம் அளித்துள்ளது.
இருப்பினும், அப்பகுதிகளில் பிற்பகலில் சிறிதளவு மழை பெய்தபோதிலும், வரும் வாரத்திலும் கடும் வெப்பம் தொடரும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியானது தீவின் 7 மாவட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
எல் நினோ சூழலானது, அந்த மாவட்டங்களின் நீர் ஆதாரங்களுக்கும், முக்கியமாக விவசாயத் தொழில்களுக்கும் ஒரு துயரமான நிலையை ஏற்படுத்தி வருகிறது.
மொனராகலை மாவட்டத்தில் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட பல சிறிய குளங்கள் ஏற்கனவே முற்றிலுமாக வற்றிவிட்டன.
மேலும், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வாக, சியம்பலண்டுவ பிரதேச சபையும் நீர் வழங்கல் வாரியமும், சியம்பலண்டுவ பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் 48 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள குழாய்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்திருந்தன.




