தென்னாப்பிரிக்காவில் குடியேறிகளுக்கு எதிரான போராட்டம் – பலர் கைது, இராணுவம் குவிப்பு
தென்னாப்பிரிக்காவில் நேற்று குடியேறிகளுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட 900 பேரை கைது செய்துள்ளதாக தென்னாப்பிரிக்க பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்தாலும், சில சமயங்களில் வன்முறையாகவும் மாறி, கடைகள் சூறையாடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 120 பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 108 பேரணிகள் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் 12 பேரணிகளுக்கு பொலிஸாரின் தலையீடு தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியேற்ற விதிமீறல்கள் முதல் பொது வன்முறை, ஆவணமற்ற குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடையொன்று சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஐந்து மாகாணங்களில் இரவு முழுவதும் கூடுதல் காவல்துறைப் படைகள் குவிக்கப்பட்டன.
அதே நேரத்தில், ஜோகன்னஸ்பர்க்கின் உள்நகரப் பகுதியான ஹில்ப்ரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில், அங்கு ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




