புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும்: நீதி அமைச்சர் உறுதி
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை தொடர்பில் தமது கட்சியின் உறுப்பினர் லால் விஜேநாயக்க மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவர் கட்சியின் பொது நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“எமது அரசாங்கத்திற்குள் உள்ளவர்களுக்கு இடையே வெவ்வேறான கருத்துகள் இருந்தாலும், இறுதியில் அனைவரும் பொதுவான ஒரு நிலைப்பாட்டையே ஏற்போம். இதுவே உண்மையான ஜனநாயகப் பண்பாடாகும். இதற்கு முன்னரும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
எனவே, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் லால் விஜேநாயக்கவிடம் மாறுபட்ட கருத்து நிலைப்பாடு இருக்கலாம். இருப்பினும், இறுதியில் அவர் பொதுவான நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நான் முழுமையாக நம்புகின்றேன்.
புதிய அரசமைப்பு மறுசீரமைப்பு என்பது ஒரு நீண்டகால பொறிமுறையாகும். அதனை நாம் நிச்சயம் முன்னெடுப்போம். அதற்கு முன்னதாக, மிக முக்கியமான சில மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும்,” என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.




