பாதுகாப்பு படைகளுக்கு நவீன தொழில்நுட்பம்: ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு
தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைத்து தேசிய மையமொன்றை நிறுவுவதன் மூலம், அந்தப் பணிகளின் செயல்திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரிப்பதன் ஊடாக எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் பாதுகாப்புப் படையினர் நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக இணைவதற்கும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கும் உள்ள தேவை குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்கும் புதிய அறிவைப் பெறுவதற்கும் வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் செயற்பாடுகள் குறித்தும், நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது மற்றும் அதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவது மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உழைப்புப் பங்களிப்பை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.




