போலி கனேடிய கடவுச்சீட்டு : லண்டன் செல்ல முயற்சி- இலங்கை தமிழர் பெங்களுரில் கைது
போலி கனேடிய கடவுச்சீட்டு மற்றும் போலி குடிவரவு ஆவணங்களைப் பயன்படுத்தி லண்டனுக்குப் பயணிக்க முயன்றதாகக் கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ். சுபாகரன் என்ற இலங்கை பிரஜை லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற முயன்றபோது, அவரது பயண ஆவணங்களில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிந்த குடிவரவு அதிகாரிகள் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சுபாகரன் ஜூன் 23 அன்று விமான நிலையத்திற்கு வந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கான புறப்பாடு நடைமுறைகளை முடித்துள்ளார்.
இருப்பினும், சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறுவதற்குப் பதிலாக, அவர் லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI-133-ல் ஏறுவதற்காக முனையம் 2-இன் புறப்பாடு குடிவரவுப் பகுதிக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை, குடிவரவு அதிகாரிகளை மேலதிக சோதனைகளை நடத்தத் தூண்டியது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது அசல் இலங்கை கடவுச்சீட்டை மறைத்து, “சிவரஜா தக்ஷன்” என்ற பெயரில் போலி கனேடிய கடவுச்சீட்டை வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து போலியான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் மேலதிக விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலியான கடவுச்சீட்டு எவ்வாறு பெறப்பட்டது என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெரிய ஆவண மோசடி அல்லது சட்டவிரோதக் குடிவரவு வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்தாரா என்பதையும் கண்டறிய, குடிவரவு அதிகாரிகள் ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




