ஐரோப்பாவிற்கு கடத்தப்பட இருந்த 317 மில்லியன் டொலர் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்
ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த சுமார் 317 மில்லியன் டொலர் மதிப்புடைய கொக்கைன் போதைப் பொருட்களை லைபீரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது லைபீரியாவின் வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்று எனவும் அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
தலைநகர் மன்ரோவியாவிற்கு (Monrovia) கிழக்கே உள்ள டுவாசோன் (Duazon) நகரில் 3,971 கிலோ கொக்கைகன் போதைப் பொருட்களை கைப்பற்றியதோடு, அவற்றை ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற இரு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
ஸ்பெயின் மற்றும் கொலம்பியா ஆகிய இரு நாடுகளின் கடவுச்சீட்டுகளையும் வைத்திருந்த ஒருவரையும், செர்பிய கடவுச்சீட்டை வைத்திருந்த மற்றொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பொலிஸ் அதிகாரியான கோல்மன் (Coleman) தெரிவித்துள்ளார்.
அதனை அடையாளம் காண வேதியியல் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அத்துடன் குறியீடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு அதிக அளவிலான கொக்கைனைக் கடத்துவதற்கு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை ஒரு இடைவழி பாதையாக பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.




