ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீ – தேசிய அவசரநிலை பிறப்பிப்பு
ஸ்பெயினில் நேற்று இரவு முதல் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாட்ரிட் மற்றும் அதன் அண்டை மாகாணமான அவிலாவிற்கு அருகில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் தேசிய குடிமக்கள் பாதுகாப்பு அமைப்புச் சட்டத்தின் கீழ், இந்த அவசரநிலை பிரகடனமானது, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய உள்துறை அமைச்சரின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
ஒரே நேரத்தில் பல தீ விபத்துகள், மோசமான வானிலை, மற்றும் பல்வேறு பொது நிர்வாகங்களிடமிருந்து விரிவான வளங்களைத் திரட்ட வேண்டிய தேவை ஆகியவற்றின் காரணமாக அவசர நிலையை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்ற நிலையில் சுமார் 10000 மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மாட்ரிட்டின் பிராந்திய அரசாங்கம், நிலைமையை “அதிதீவிரமானது” என்று விவரித்து, உதவி கோரியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 270-க்கும் மேற்பட்ட அவசரகாலப் பணியாளர்களும், 40 தரைப்படைப் பிரிவுகளும், பல இராணுவ அவசரகாலப் பிரிவு (UME) குழுக்களுடன் சேர்த்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினும் தெற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியும், காலநிலை மாற்றத்துடன் தீவிர வெப்ப அலையால் போராடி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் தவிர்க்க முடியாத பேரிடர் சூழ்நிலையாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




