பாலஸ்தீனிய கிராமங்கள் மீது “இரும்புக்கரம்” கொண்டு தாக்க அமைச்சர் உத்தரவு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹவாட் கிலாத் (Havat Gilad) குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதலுக்குக் காரணமான கிராமத்தின் மீது ராணுவம் “இரும்புக்கரம்” கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்மோட்ரிச்,
“கிலாத் பண்ணை அருகே . தாக்குதலில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; காயமடைந்தவர்கள் குணமடையப் பிரார்த்திப்பதோடு, அங்கிருக்கும் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அரவணைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொலைகாரர்களின் கிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து, தனது ஆட்சியையும் அச்சுறுத்தலையும் (deterrence) மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என நான் கோருகிறேன்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
“பண்ணைகளில் வாழும் மக்களும், வீரமிக்க குடியேற்ற முன்னோடிகளுமே இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புச் சுவராகத் திகழ்கின்றனர். அரபு பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்ரேல் மண்ணில் எங்களது இருப்பை உறுதிப்படுத்த உறுதியோடு நிற்கும் அவர்களை நாங்கள் தொடர்ந்து பலப்படுத்துவோம், மதிப்போம்” என்றும் அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை நப்லஸ் (Nablus) அருகே உள்ள கிலாத் சோதனைச் சாவடி பகுதியில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அங்கு பாலஸ்தீனியர்கள் சிலர் பாதுகாப்பு அதிகாரியின் ஆயுதத்தைப் பறித்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மூவர் காயமடைந்தனர் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சம்பவ இடத்திலேயே நான்கு பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர்.




