சவுதி அரேபியா மீதான தாக்குதல்கள் – பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை
ஹூதி அமைப்பினர் சவுதி அரேபியா மீது மேற்கொண் தாக்குதல்களை கண்டித்துள்ள பாகிஸ்தான், அதனை கட்டுப்படுத்துமாறு ஈரானை எச்சரித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக, ஹூதிகள் கமிஸ் முஷைத்தில் உள்ள விமானத்தளம் மற்றும் ஏனைய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தின.
இதில் 73 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 12 மணி நேரத்தில் யேமனின் பல்வேறு மாகாணங்களில் சவுதி போர் விமானங்கள் 54 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அவர்கள் “பதிலடி கொடுக்கப்படாமலும் தண்டிக்கப்படாமலும் போகமாட்டார்கள்” என்றும் ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ Yahya Saree நேற்று எச்சரிக்கை விடுத்தார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இரண்டாவது போர்க்களமாக உருவெடுத்துள்ள இந்த மோதல் தீவிரமடைந்து வருகிறது.
ஒரு பக்கம் ஈரான் – அமெரிக்கா போர் இடம்பெற்று வருகின்ற நிலையில், மறுபக்கம் சவுதி அரேபியாவுடன் ஹூதி அமைப்பினர் மோதலில் ஈடுபட்டு வருவது மத்தியக்கிழக்கில் நிச்சயமற்ற தன்மையை ஆழப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அண்மையில் சவுதி அரேபியாவுடன் நேட்டோ தரத்திலான பாதுகாப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ள பாகிஸ்தான் தற்போது ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கமைய இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகள், எந்தவொரு இராணுவப் பங்களிப்பும் சவூதி பிரதேசத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்று வலியுறுத்திய நிலையில், சவூதி இராச்சியத்திற்குள் தாக்குதல்கள் பரவினால், ரியாத், அங்காரா மற்றும் இஸ்லாமாபாத் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஏற்பாட்டைத் தூண்டக்கூடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் Khawaja Asif எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஒரு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு, மூன்று நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பாகக் கருதப்படும்,” என்று ஆசிஃப் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் கூறினார்.
“இதில் எந்தவிதமான தெளிவின்மையோ சந்தேகமோ இல்லை… சவூதி அரேபியாவுக்குள் தூண்டப்படாத ஆக்கிரமிப்பு அல்லது தாக்குதல் பரவினால், அது நிச்சயமாக இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த வைக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




