காசாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றமாட்டோம்: இஸ்ரேல் உறுதி
காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் இல்லை என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இம்மாதத் தொடக்கத்தில் இரு இஸ்ரேலிய அமைச்சர்கள் பாலஸ்தீனியர்களைக் கடற்கரை பிராந்தியமான காசாவிலிருந்து பெருமளவில் வெளியேற்றுவதற்கான முன்மொழிவுகளை முன்வைத்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஸ்லோவேனியாவின் லியுப்லியானா (Ljubljana) நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிதியோன் சார், “காசா பகுதியில் இருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது நாடுகடத்தவோ நாங்கள் திட்டமிடவில்லை” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
“யாராவது தனது சொந்த விருப்பத்தின் பேரில் இடம்பெயர விரும்பினால், அவரை ஏற்றுக்கொள்ள ஒரு நாடு தயாராக இருந்தால்… நாங்கள் அதற்குத் தடை விதிக்க மாட்டோம். ஆனால் எவரையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற மாட்டோம்” என்றும் குறிப்பிட்டார்.
ஸ்லோவேனியாவின் லியுப்லியானாவில் இஸ்ரேலிய தூதரகத்தைத் திறந்து வைப்பதற்காக அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, செப்டம்பர் 2 ஆம் திகதி கருத்து தெரிவித்திருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz), பாலஸ்தீனியர்களின் இந்த இடம்பெயர்வு இல்லாமல் காசாவிற்கு இறுதியில் உண்மையான தீர்வு எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.
அதனையடுத்து செப்டம்பர் 3 ஆம் திகதி, தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir), “சுயவிருப்ப இடம்பெயர்வு” எனக் குறிப்பிட்டு, காசாவின் மக்கள் தொகையை வெளியேற்றுவதற்கான ஏழு ஆண்டு திட்டமொன்றை வரைபடமாக வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், பாலஸ்தீனியர்களைக் காசாவை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தும் திட்டம் எதுவும் இஸ்ரேலிடம் இல்லை என்று இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலில் வரும் அக்டோபர் 27 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




