22 ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டமூலம் குறித்துப் பேராயருக்கு விளக்கமளிப்பு!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் இன்று (06) பேராயரைச் சந்தித்து, இந்த உத்தேச சட்டமூலம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், “மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், மக்கள் ஆணையை மீறாத வகையிலும் அரசாங்கத்தின் திட்டங்களை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு அறிவுறுத்தினார்” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த அரசமைப்புத் திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இவ்விரு அமைச்சர்களும் முன்னதாக மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




