இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு பேரிடி!
அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக, வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மனங்கே, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியானது, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவை கணிசமாகப் பாதித்து, விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மே மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியில் (SSCL) 2.5% உயர்வு, இந்த விலை உயர்வுக்கு மேலும் பங்களிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வாகன இறக்குமதி மூலம் கணிசமான வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. எனது கணக்கீடுகள் சரியாக இருந்தால், இந்த மூலத்திலிருந்து சுமார் 700 பில்லியன் ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம், நாங்கள் அரசாங்க வருவாய்க்கு கணிசமான பங்களிப்பை வழங்குகிறோம்.
ஒவ்வொரு டொலருக்கும் சுமார் 1.5 அமெரிக்க டாலர் வருவாய் ஈட்ட அரசாங்கம் நம்புகிறது. ஆனால், நாங்கள் இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு, ஒரு டொலருக்கு 2 முதல் 2.5 அமெரிக்க டொலர் வரை வரிகள் விதிக்கப்படுகின்றன.
சில மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை, வரிப் பிரச்சினைகள் காரணமாக, ஒரு டாலருக்கான வருமானம் இன்னும் குறைவாகவே உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.





