புதிய அரசமைப்பு எங்கே? NPP அரசு மௌனம்
புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மௌனம் காப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தி SJP கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா Ajith P Perera கூறியவை வருமாறு ,
“ பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, புதிய சட்டம் கொண்டுவரப்படும் என இந்த அரசாங்கம் கூறினாலும், அது நடக்குமா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
பயங்கரவாதத்தை தடுப்பதற்குரிய புதிய சட்ட ஏற்பாடு அவசியம். ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் உள்ளது.
புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அது பற்றி தற்போது கதைக்கப்படுவதில்லை.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனவும் கூறினர். அதற்குரிய ஏற்பாடும் இல்லை.
உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதவி வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்பட வேண்டும். இதற்குரிய ஏற்பாட்டை அரசாங்கம் தாமதப்படுத்துவது ஜனநாயக விரோதச் செயலாகும்.” – என்றார் அஜித் பி பெரேரா.




