சீனா, ரஷ்ய ஜனாதிபதிகள் இந்தியா வருகை: ஏற்பாடுகள் தீவிரம்
டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிவிளாடிமிர் புடின் ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான ஆயத்தப் பணிகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்த உயர்மட்ட வருகைகள் தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த திங்கள் ( 27) மற்றும் செவ்வாய்க்கிழமை ( 28 இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பீஜிங்கில் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அப்போது, “உயர்மட்ட உறவுகளை வலுப்படுத்துவது” குறித்து இரு தரப்பும் விவாதித்தன.
சமீபத்திய வாரங்களில், சீன அதிகாரிகளும் இந்தியாவிற்கு வருகை தந்து, ஜி ஜின்பிங்கின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
ஜி ஜின்பிங்கின் சாத்தியமான வருகைக்கான பிற ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுவாகச் சீனப் பிரதமர் லீ சியாங் அல்லது பிற மூத்த அதிகாரிகள் வெளிநாடு செல்லும்போது இல்லாத அளவிலான கூடுதல் கவனம் மற்றும் முன்னேற்பாடுகளைச் சீன அதிகாரிகள் தற்போது இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காமல், பிரதமர் லீ சியாங்கைத் தான் அனுப்பி வைத்தார்.
இருப்பினும், 2023 இல் தென்னாப்பிரிக்கா மற்றும் 2024 இல் ரஷ்யாவில் நடைபெற்ற மாநாடுகளில் அவர் பங்கேற்றார். 2024 ரஷ்ய மாநாட்டில் பிரதமர் மோடியுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மீண்டும் சீரடைய வழிவகுத்தது.
அதேவேளை, ரஷ்ய ஜனாதிபதியின் வருகையும் உறுதியாகியுள்ளது.




