ஒற்றையாட்சி அரசமைப்பு தமிழர்களை அடிமையாக்கும்
புதிய அரசமைப்பு என்ற பெயரில் ஒற்றையாட்சி அரசமைப்பைத் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அவ்வாறு அது நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளை இழந்து அடிமையினமாக மாற்றப்படும் பேராபத்து ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பருத்தித்துறை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் குறிப்பிட்ட தொகை வாக்குகளைப் பெற்று, அதன் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்.
இதனைத் தமிழ் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையாகத் தேசிய மக்கள் சக்தி சர்வதேச ரீதியாகக் காட்டி வருகின்றது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் காணப்படும் இந்த அரசு, புதிய அரசமைப்பு என்ற பெயரில் 2015 – 2019 காலப்பகுதியில் நல்லாட்சி அரசால் உருவாக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ஜிய’ அரசமைப்பை நிறைவேற்றத் தீவிரம் காட்டி வருகின்றது.
அதனை உருவாக்குவதில் நல்லாட்சி காலத்தில் துணைநின்ற சுமந்திரன், இப்போதும் அதற்கு ஆதரவு வழங்குவதில் தீவிரமாக உள்ளார்.
அந்த அரசமைப்புக்கு எதிராகத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது வாக்களித்தால், அவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாகக் கட்சியின் செயலாளர் என்ற ரீதியில் சுமந்திரன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அன்று கூட்டமைப்பாக இருந்தவர்கள் இன்று வீடு, சங்கு எனப் பிரிந்து நிற்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தி, தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என வடக்கு, கிழக்கில் உள்ள 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில், எம்மைத் தவிர ஏனைய 18 பேரும் இந்த அரசமைப்புக்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசமைப்பை மாற்ற வேண்டுமானால் அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்தால், தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
ஏனெனில், ‘ஏக்கிய ராஜ்ஜிய’ அரசமைப்பின் மூலம் இந்த நாடு சிங்களவர்களுக்கானதாக முற்றிலுமாக மாற்றப்பட்டுவிடும். அதன் பின்னர் தமிழர்கள் அடிமை இனமாக மாறும் பேராபத்து ஏற்படும். ஆகவே, எமது உரிமைகளை ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க முடியாது.” – என்றார்.






