ஆங்கிலக் கால்வாய் கடக்க முயன்ற சிறுபடகு விபத்து – இரண்டு பெண்கள் உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டிலிருந்து சிறிய படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்து செல்ல முயன்றபோது, இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு பிரான்சின் கடற்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட அந்தப் படகில் சுமார் 82 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த இரண்டு பெண்களும் 20 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூன்று பயணிகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகின் இயந்திரம் செயலிழந்ததால் அது கட்டுப்பாட்டை இழந்து கடற்கரைக்கு அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலில் சிக்கியிருந்த 17 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக ஆங்கிலக் கால்வாயை கடக்க முயலும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





