சிறைச்சாலைகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு
வன்முறை வெடித்த குருவிட்ட சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு – பள்ளஞ்சேன திறந்தவெளி சிறைச்சாலை உட்பட இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு வெகுவாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாகப் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) பாதுகாப்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், புலனாய்வுப் பிரிவினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் குறுகிய காலப்பகுதிக்குள் நீர்கொழும்பு, மஹர, வெலிக்கடை (மகசின்), குருவிட்ட மற்றும் பள்ளஞ்சேன ஆகிய ஐந்து சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து குழப்ப நிலைகள் உருவெடுத்தன.
இந்த மோதல் சம்பவங்களால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பெருமளவிலான சிறைச்சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருக்கலாம் என அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகப் பல கோணங்களில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




