நியூசிலாந்தில் புயல் நிலைமை : அவசரநிலை அறிவிப்பு!
நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் வீசிய புயல் காரணமாக இன்று விமான மற்றும் படகு சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
மேலும் நியூசிலாந்து தலைநகரின் தெற்குக் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த மோசமான வானிலை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர்.
வெலிங்டன் விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டதாகவும், 08 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பலத்த காற்றின் காரணமாக தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே விமான சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என ஏர் நியூசிலாந்து நிறுவனம் பயணிகளுக்கு எச்சரித்துள்ளது. அத்துடன் பயணத்தை மறுபதிவு செய்வதற்கான விருப்பங்களையும் வழங்கியுள்ளது.





