2030 உலகக் கோப்பை வரை அமெரிக்க அணியின் பயிற்றுநராக Pochettino நீடிப்பு
FIFA உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க ஆண்களுக்கான கால்பந்து அணியை 16 அணிகளுக்கான சுற்று வரை வழிநடத்தியதைத் தொடர்ந்து, 2030 ஆம் ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கோப்பைத் தொடர் வரையிலும் அந்த அணியை வழிநடத்த தலைமைப் பயிற்றுநர் மொரிசியோ பொசெட்டினோ (Mauricio Pochettino) ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க கால்பந்து சம்மேளனம் (US Soccer) அறிவித்துள்ளது.
எதிரணியை நோக்கித் தீவிரமாக நகர்ந்து அதிரடியாகத் தாக்கி ஆடும் பாணியைக் கொண்ட 54 வயதான அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர், 2024-ஆம் ஆண்டு செல்சி (Chelsea) அணியில் இருந்து விலகிய பின்னர் அமெரிக்க தேசிய அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவரது முந்தைய ஒப்பந்தம் 2026 உலகக் கோப்பையுடன் நிறைவடையவிருந்தது.
இது குறித்து அமெரிக்க கால்பந்து சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜே.டி. பேட்சன் (JT Batson) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “மௌரிசியோவும் அவரது குழுவினரும் அமெரிக்க கால்பந்தின் எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். எங்களின் இந்த புதிய திட்டம் அமெரிக்க ஆண்கள் தேசிய அணியின் முன்னேற்றத்தையும், அமெரிக்க கால்பந்தின் வேகத்தையும் மேலும் வலுப்படுத்த உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
பொசெட்டினோவின் தலைமையின் கீழ், அமெரிக்க அணி ஆஸ்திரேலியா, பராகுவே மற்றும் துருக்கி ஆகிய அணிகளை வீழ்த்தி தனது உலகக் கோப்பைப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது. மேலும், இத்தொடரில் அவர்கள் பெற்ற 6 புள்ளிகளே உலகக் கோப்பை வரலாற்றில் அந்த நாட்டின் ஆண்கள் அணி பெற்ற அதிகபட்ச புள்ளிகளாகும்.
சொந்த மண்ணில் நீண்ட தூரம் பயணிப்பார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 32 அணிகளுக்கான சுற்றில் போஸ்னியாவை வீழ்த்திய அமெரிக்க அணி, பின்னர் பெல்ஜியத்திடம் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறியது.




