பிரிஸ்பேனில் இலங்கை தமிழரின் மோசமான நடத்தை – 89 நாட்கள் சிறை தண்டனை
பிரிஸ்பேன் ரயிலில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் புட்டியை உடைத்ததற்காக, இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 89 நாட்கள் சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
22 வயதான சரனீஸ் சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளியான பேட்லி மாவின்னி ஆகியோர், ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் லைன் ரயிலில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் சிசிடிவி காணொளிகளை பதிவாகியதைத் தொடர்ந்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்றைய தினம் காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்த பாதிக்கப்பட்டவரை சிவகுமாரும், மாவின்னியும் அணுகி அவரிடம் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில், குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தன்னை தற்காப்புக்காகவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார், இருப்பினும் நீதிமன்றம் அவரது விவாதத்தை நிராகரித்தது.
“ஒருவரின் தலையில் பாட்டிலால் அடிப்பது [தற்காப்பு] ஆகாது… இது ஒரு அப்பாவி மனிதர் மீது நடத்தப்பட்ட மிகவும் கொடூரமான தாக்குதல்.” என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 08 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இருப்பினும் சிவகுமார் ஏற்கனவே 89 நாட்கள் காவலில் இருந்த நிலையில், மேற்பார்வையின் கீழ் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குக் குடிபெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.




