ஸ்ரீலங்கா பொலிஸா, ஜே.வி.பி. பொலிஸா? நாமல் கடும் சீற்றம்
ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிஸ் மீது தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
வழக்கு விசாரணையொன்றிற்காக நேற்று நீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா பொலிஸ், இன்று ‘ஜே.வி.பி. பொலிஸாக’ மாற்றப்பட்டுள்ளது. பொலிஸார் சமர்ப்பிக்கும் தகவல்கள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே நீதிபதிகள் தீர்மானங்களை எடுக்கின்றனர்.
எனவே, பொலிஸ் துறை இவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்டால், அது நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும்.
இந்த அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகிறது. இதன் விளைவை அவர்கள் விரைவில் எதிர்கொள்ள நேரிடும். எவ்வளவு உயரத்திற்குப் பாய்ந்தாலும் இறுதியில் கீழே விழுந்துதானே ஆக வேண்டும்?” என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.




