ஜப்பானில் நிலைநிறுத்தப்படும் டைஃபான் ஏவுகணை – ரஷ்யா கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியை நடத்தவுள்ளன. இந்த பயிற்சியின்போது அமெரிக்காவின் டைஃபான் ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ரஷ்யா கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வொஷிங்டன் தனது இந்தோ-பசிபிக் நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்தி வரும் நிலையில், இது மாஸ்கோவிற்கும் டோக்கியோவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஓரியண்ட் ஷீல்ட் Orient Shield exercises பயிற்சிகளின் போது அமெரிக்க டைஃபான் ஏவுகணை ஏவுதளங்களை நிலைநிறுத்தத் திட்டமிட்டிருப்பது குறித்து ரஷ்யா ஜப்பானிடம் முறையாக எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு, சுமார் 1,600 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய டோமஹாக் குரூஸ் ஏவுகணைகளையும், அத்துடன் எஸ்எம்-6 ஏவுகணைகளையும் ஏவும் திறன் கொண்டது.
ஓரியண்ட் ஷீல்ட் பயிற்சிகள் ஜப்பானில் செப்டம்பர் 8 முதல் 24 வரை நடைபெற உள்ளன. இதில் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 37000 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனால், இந்த ஆண்டு பயிற்சிகள் இதுவரை நடந்தவற்றிலேயே மிகப்பெரியதாக அமையும். டைஃபான் ஏவுகணை அமைப்பு இதில் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அமெரிக்காவின் இந்த நடுத்தர தூர ஏவுகணை அமைப்பு பயிற்சிகளில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இதேவேளை அண்மையில் ஜப்பான் உரிமைக் கோரிவரும் குரில் தீவுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சென்று வந்த சர்ச்சை தீருவதற்குள் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இது இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவை மேலும் சிக்களுக்கு உள்ளாக்குகிறது.




