அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது பிணைத் தொகை செலுத்தும் திட்டத்தை நிரந்தரமாக்க தீர்மானம்
அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது பிணைத் தொகை செலுத்தும் திட்டத்தை நிரந்தரமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பொன்றில், பெரும்பாலும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா கோரி விண்ணப்பிக்கும் போது பிணைத் தொகையாக 20,000 டொலர்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வணிகம் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக வழங்கப்படும் B1 மற்றும் B2 விசாக்களுக்குப் பொருந்தும்.
அமெரிக்க வெளியுறவுத் துறை, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறை ஆகியவை விசா பிணைத் திட்டத்தை நிர்வகிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கான ஒரு முன்னோடி கட்டமைப்பை கடந்த 2025 இல் சமர்ப்பித்திருந்தனர்.
முன்னதாக தூதரக அதிகாரிகள் $5,000, $10,000 அல்லது $15,000 வரை பிணைத்தொகையைக் கோரலாம் என முன்மொழியப்பட்டிருந்தது. இருப்பினும் இறுதியாக 20000 டொலராக அந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் வரும் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




