மகத்தான மைல்கல்லை எட்டத் தயாராகும் மெஸ்ஸி
கடந்த உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட பின்னர் அர்ஜென்டினா மற்றொரு வெற்றிக்குத் தயாராகி வரும் நிலையில், அந்த அணியின் ஜாம்பவாக் வீரரான லியோனல் மெஸ்ஸி மற்றொரு வரலாற்றுச் சாதனையை எதிர்நோக்கியுள்ளார்.
நாளை காலை அல்ஜீரியா அணியை எதிர்த்து விளையாடவுள்ள நிலையில், மெஸ்ஸி தனது சர்வதேச வாழ்க்கையில் ஒரு மகத்தான மைல்கல்லை எட்டுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது அர்ஜென்டினா ஜெர்சியில் மெஸ்ஸி விளையாடும் 200வது போட்டியாகும்.
மெஸ்ஸியின் இந்த பயணம், 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி, ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் முதன்முதலில் விளையாடியிருந்தார்.
அந்தப் போட்டியில் வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே விளையாடிய மெஸ்ஸி, இன்று உலக கால்பந்தின் உச்சமாக விளங்குகிறார்.
இந்த இருபது ஆண்டு காலப் பயணத்தில் 199 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 117 கோல்கள் மற்றும் 64 உதவிகளுடன் அர்ஜென்டினாவின் முன்னணி வீரராகத் திகழ்கிறார்.
மெஸ்ஸி இதுவரை அர்ஜென்டினா அணிக்காக 16,380 நிமிடங்கள் விளையாடியுள்ளார்.
கடுமையான போராட்டங்களுக்கும் வேதனையான தோல்விகளுக்கும் பின்னர், மெஸ்ஸி அர்ஜென்டினாவின் கால்பந்துக் கடவுளானார்.
2022 கத்தார் உலகக் கிண்ணப் பட்டம், 2021 மற்றும் 2024 கோபா அமெரிக்கா பட்டங்கள், மற்றும் 2022 ஃபைனலிசிமா பட்டம் ஆகியவை மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினாவின் சாதனைக் களஞ்சியத்தில் ஜொலிக்கின்றன.
ஆனால் இந்த உயரங்களை எட்டுவதற்கு முன்பு, அந்த நட்சத்திர வீரர் பல கண்ணீரையும் சந்தித்தார்.
2014 உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும், 2015 மற்றும் 2016 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டிகளிலும் ஏற்பட்ட வேதனையான தோல்விகள் மெஸ்ஸியின் வாழ்க்கையில் பெரும் பின்னடைவுகளாக அமைந்தன.
ஆனால், அயராது போராடிய மெஸ்ஸி, அனைத்து தடைகளையும் கடந்து இன்று இந்த வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளார்.
21 ஆண்டு கால கால்பந்து வாழ்க்கையில் இது மெஸ்ஸியின் ஆறாவது உலகக் கிண்ண தொடராகும்.
ஏற்கனவே 26 உலகக் கிண்ணப் போட்டிகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ள மெஸ்ஸி, இந்த உலகக் கிண்ணத்தின் மூலம் தனது பொன்னான ஆண்டுகளை மேலும் பிரகாசமாக்க இலக்கு வைத்துள்ளார்.
40 வயதை நெருங்கினாலும், களத்தில் பந்து கிடைக்கும்போதெல்லாம் மெஸ்ஸி அதே பழைய அற்புதங்களை நிகழ்த்துகிறார்.
அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியின் மூலம், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் 200 போட்டிகளை நிறைவு செய்த அரிதிலும் அரிதான வீரர்களின் பட்டியலில் நுழைவார்.
உலகம் முழுவதும் உற்று நோக்கும் அர்ஜென்டினாவின் இந்த உலகக் கிண்ணப் பயணம், இது மெஸ்ஸியின் கடைசிப் போட்டியாக இருப்பதால் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த ‘இரட்டை சதம்’ போட்டியில் அர்ஜென்டினா எப்படி விளையாடும் என்பதையும், மெஸ்ஸி மீண்டும் தனது மாயாஜாலத்தை நிகழ்த்துவாரா என்பதையும் அறிய கால்பந்து ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.





