நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிரதான தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நடைபெறவுள்ளன.
சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது. அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
10 குற்றச்சாட்டுகள் அடங்கிய இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். சபாநாயகரிடம் குறித்த பிரேரணை நேற்று கையளிக்கப்பட்டது.
அதேவேளை, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்கட்சியிலுள்ள மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை.
வாக்கெடுப்பின்போது தத்தமது கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) ஆகியன இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எனினும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது.




