செய்தி விளையாட்டு

இரு தொடர்களை இழந்த பின் மீண்டெழுந்தது இந்திய அணி

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சந்தித்த தொடர் தோல்விகளுக்குப் பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான T20 தொடரை ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையிலேயே கைப்பற்றியுள்ளது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சந்தித்த தொடர் தோல்விகளுக்குப் பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான T20 தொடரை ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையிலேயே கைப்பற்றியுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில், எந்தவொரு தருணத்திலும் இந்தியாவின் வெற்றியைத் தவிர வேறு எந்த முடிவும் சாத்தியம் இல்லை என்ற அளவிலேயே ஆட்டம் அமைந்தது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ரசா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்தியாவின் தொடக்கம் சற்று தடுமாற்றமாக இருந்தாலும், திலக் வர்மாவும் இஷான் கிஷனும் அதிரடியாக அரைசதங்கள் விளாசி, நடு மற்றும் கடைசி ஓவர்களில் ரன் வேகத்தை கணிசமாக உயர்த்தினர்.

இறுதியில் இந்தியா எடுத்த 219 ரன்கள், ஜிம்பாப்வே அணிக்கு மிகவும் அதிகமான இலக்காக அமைந்தது. ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் எடுத்த 32 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும்.

பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவுக்கு இடது தொடையில் தசைநார் பிடிப்பு ஏற்பட்டு பாதியிலேயே வெளியேறியதால், இந்தியா மொத்தம் ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், பெரிய சிரமமின்றி இந்திய அணி எளிதாக வெற்றியைப் பெற்றது.

வைபவ் சூரியவன்ஷி வழக்கம் போல் பந்தை எதிர்கொண்டு புல் ஷாட்களை ஆடத் தொடங்கினார். பந்துகள் சற்று புல்-லென்த்தாக வீசப்பட்டபோது, மிட்-ஆஃப் திசைக்கு மேலே தூக்கி அடித்தார்.

இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ங்கரவாவின் முதல் ஓவரில் 4, 4, 6, 4 என ரன்களைக் குவித்தார். ஆனால், தொடர்ந்து ஷார்ட்-பால் வீசிய ங்கரவாவின் திட்டத்திற்குப் பலன் கிடைத்தது; சூரியவன்ஷி அடித்த புல் ஷாட் மிட்-ஆனில் கேட்ச் ஆனது. இந்தியா 3 ஓவர்களில் 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

பொறுப்பை கையில் எடுத்த இஷான் கிஷன்

கிஷன் களத்திற்கு வந்தவுடனேயே அதிரடியைத் தொடங்கினார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக டீப் மிட்விக்கெட் மற்றும் டீப் ஸ்கொயர் லெக் திசைகளில் புல் ஷாட்களைப் பறக்கவிட்டார். சுழற்பந்து வீச்சு அறிமுகப்படுத்தப்பட்டதும், கவர் திசையில் சிறப்பான டிரைவ்களை ஆடியும், லேட் கட்கள் மூலமும் ரன்களைக் குவித்தார்.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து 66 ரன்கள் கூட்டாண்மை அமைத்த கிஷனே அதிக ரன்களை விளாசினார். இந்த இணை, ஸ்ரேயாஸ் ஐயர் பேக்வர்ட் பாயிண்ட் திசையில் கேட்ச் ஆனபோது பிரிந்தது. கிஷன் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

அதன்பின், 13வது ஓவரில் பிராட் எவன்ஸ் பந்தில் தனது முதல் சிக்ஸரை அடித்தார். தொடர்ந்து 15வது ஓவரில், ரசாவின் பந்துவீச்சை எதிர்கொண்டு டீப் மிட்விக்கெட் திசையில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் உட்பட மொத்தம் 21 ரன்களை விலாசினார்.

வேகம் காட்டிய திலக் வர்மா

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக திலக் வர்மாவின் முந்தைய புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கவில்லை. இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் குறைந்தது 100 பந்துகளை எதிர்கொண்ட இந்திய பேட்டர்களில் அவரே மெதுவான ரன் விகிதத்தைக் கொண்டிருந்தார்.

அத்தகைய சுழற்பந்து வீச்சிற்கு எதிராகவே அவர் களமிறங்கி ரன் அடிக்க வேண்டியிருந்தது. அவர் எதிர்கொண்ட இரண்டாவது பந்தே லெக் திசையில் ஃபுல்-லென்த்தாக வர, அதை அழகாக ஸ்வீப் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார்.

ஆரம்பத்திலிருந்தே அவர் பயமின்றி ஆடினார்; பிளெசிங் முசாரபானியின் பந்தில் அவர் ஆடிய ஸ்கூப் ஷாட் அதற்குச் சான்றாக அமைந்தது. குறிப்பாக, பாயிண்ட் திசைக்கு பின்னால் இடைவெளிகளைக் கண்டறிந்து அவர் ஆடிய ஆஃப்-சைட் ஷாட்கள் மிகவும் சிறப்பாக இருந்தன.

முசாரபானியின் 14வது ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசி, 12 பந்துகளில் 23 ரன்களை எட்டினார். பந்துவீச்சாளர்கள் அந்த திசையில் ரன்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது, திலக் லெக் திசையில் நகர்ந்து லாங்-ஆன் மற்றும் கௌ-கார்னர் திசைகளுக்கு மேலே பந்துகளைப் பறக்கவிட்டார்.

ங்கரவா பந்துவீச்சில் அவர் அடித்த சிக்ஸரே இந்த இன்னிங்ஸின் சிறந்த ஷாட்டாக அமைந்தது. பந்துவீச்சாளரை ஏமாற்றுவது போல் நகர்ந்து, பின்னர் ஒரே இடத்தில் நிலைத்து நின்று லாங்-ஆன் திசைக்கு மேலே சிக்ஸர் அடித்தார்.

அடுத்த பந்திலேயே, போட்டி முடிய 3 ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில், 23 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். ரிங்கு சிங்கின் அதிரடி உதவியுடன், கடைசி மூன்று ஓவர்களில் இந்தியா 31 ரன்கள் எடுத்து 219 ரன்களை எட்டியது.

பென்னட்டின் தடுமாற்றமான ஆட்டம்:

சேஸிங்கின் முதல் ஓவரிலேயே பென்னட் ஆட்டமிழந்திருக்க வேண்டும். அவர் அடித்த பந்து கிஷனிடம் விக்கெட் கீப்பிங் கேட்சாகச் சென்றது, ஆனால் இந்திய வீரர்கள் யாரும் அப்பீல் செய்யவில்லை. அடுத்த பந்திலேயே, அறிமுக வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்குரின் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடித்தார்,
ஆனால் அங்கு நின்ற திலக் வர்மா எளிய கேட்சை தவறவிட்டார்.

இதைப் பயன்படுத்தி பென்னட் 32 ரன்கள் எடுத்தார். ஆனால் யாஷ் தாக்குர் அவரை அதிக நேரம் பேட்டிங் செய்ய விடவில்லை; ஒரு ஸ்லோயர் டெலிவரி மூலம் பென்னட்டை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகச் செய்து வெளியேற்றினார். பின்னர் தாடிவானாஷே மருமானியையும் தனது ஆஃப்-கட்டர் பந்துவீச்சால் போல்டாக்கினார்.

பிரின்ஸ் காயம்; வாய்ப்பைப் பயன்படுத்திய அபிஷேக்

தனது முதல் பந்திலேயே பென் கரனின் விக்கெட்டை (டீப் தேர்ட் திசையில் கேட்ச்) வீழ்த்தினார் பிரின்ஸ் யாதவ். தனது இரண்டாவது ஓவரில் (இன்னிங்ஸின் 6வது ஓவர்), டிரைவ் செய்ய முயன்ற ரசாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ஆனால், பந்தை வீசி முடித்தவுடன் இடது தொடையில் தசைநார் பிடிப்பு ஏற்பட்டதால், வலியால் துடித்து பாதியிலேயே வெளியேறினார். 1.2 ஓவர்களில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், போட்டி முழுவதும் மீண்டும் களத்திற்கு வரவில்லை.

இதனால், இந்தியா அபிஷேக் சர்மாவைச் சில ஓவர்கள் பந்துவீச அழைக்க வேண்டியதாயிற்று. பேட்டிங்கில் சோபிக்கத் தவறிய அபிஷேக், பந்துவீச்சில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கடைசி நேரத்தில் விக்கெட்டுகளைக் வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே பேட்டர்கள் பெரிய ஷாட்களுக்கு முயன்று இந்திய ஃபீல்டர்களிடம் கேட்ச் ஆயினர். அபிஷேக் சர்மா 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி