தீவிரமடையும் காட்டுத்தீ: 3 லட்சம் பேர் வெளியேற்றம்; ஸ்பெயினில் அவசர நிலை பிரகடனம்
தென்மேற்கு பிரான்சில் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி, போர்டோ (Bordeaux) நகரை அச்சுறுத்தி வரும் நிலையில், அதைக்கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
எனினும், “தீ இன்னும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலத்த காற்று மற்றும் கடும் வெப்பநிலை காரணமாக தீயணைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக எரிந்து வரும் காட்டுத்தீக்கு பயந்து 3,00,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஸ்பெயினில், வானிலையில் ஏற்பட்ட மாற்றம் மாட்ரிட் நகருக்கு வெளியே உள்ள தீயணைப்பு வீரர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “முன்னால் சவாலான காலங்கள் காத்திருக்கின்றன” என்பதை ஒப்புக்கொண்டார். இதற்கிடையில், வலென்சியாவில் (València) காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மணிசஸ் (Manises) பகுதியில் உள்ள ‘சால்ட் டி எல்’ஐகுவா’ (Salt de l’Aigua) பள்ளத்தாக்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது, 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்சில், சனிக்கிழமை இரவில் மேலும் 55,000 பேர் வெளியேற உத்தரவிடப்பட்டனர். இதன் மூலம் தென்மேற்கு பிராந்தியங்களான ஜிரோண்ட் (Gironde) மற்றும் லேன்ட்ஸ் (Landes) பகுதிகளில் வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 2,50,000 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் அரசு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தனது ராணுவத்தை திரட்டியுள்ளது. புதர்களை அகற்றுவதற்கும், தீ பரவாமல் தடுப்பதற்கான பாதைகளை உருவாக்குவதற்கும் (fire breaks) கூடுதல் ராணுவப் படைகள் தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக அனுப்பப்பட்டுள்ளன.




