ஹார்முஸ் நீரிணை உடன் திறக்கப்படமாட்டாது: ஈரான் திட்டவட்டம்
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எதிர்காலக் கப்பல் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அது இந்த முக்கியக் கடல்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று ஈரானின் அரசு நடத்தும் ‘ஐ.ஆர்.ஐ.பி’ (IRIB) ஊடகம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்காலக் கடல்வழிப் போக்குவரத்து குறித்த பேச்சுவார்த்தைகள் டெஹ்ரானுக்கும் (ஈரான்) மஸ்கட்டிற்கும் (ஓமான்) இடையே மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்பட்டு வருவதாகவும்,இதற்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.
“ஹார்முஸ் நீரிணை வழியே கப்பல்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே எட்டப்படக்கூடிய சாத்தியமான ஒப்பந்தத்திற்கும், இந்த நீரிணையை உடனடியாகத் திறப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்றும் அது மேலும் குறிப்பிட்டது.
“ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது என்பது அமெரிக்காவின் நடத்தையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அதன் விதிமீறல்களைத் திருத்திக்கொள்வதைப் பொறுத்தே அமையும்” என்றும் ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.




