அனோஜன் வழக்கு – சவுதி அரேபியாவின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்க தயாராகும் சுமந்திரன்
மதநிந்தனைக் குற்றச்சாட்டில் அனோஜன் என்ற இளைஞர் மரண தண்டனை எதிர்கொண்டிருப்பதாக கூறப்படும் விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் தூதுவர் இல்லாத போதிலும், அதிகாரத்திலுள்ள உயர்மட்டப் பிரதிநிதியை உடனடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் கோரவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதேநேரம் அனோஜன் தனது சமூக ஊடகப் பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டு, காணொளி ஊடாகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் என்ற செய்திகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படவேண்டியவை ஆகும்.
வேதனையை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருத்து, ஒரு மனிதன் மனம் திருந்தி, தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இல்லாமலாக்கிவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு இஸ்லாமியனாக அல்லாஹ்வின் அளப்பரிய கருணை மீது நான் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ‘அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்’ என்றே நாம் அல்லாஹ்வைப் போற்றுகிறோம். நாம் மனிதர்களின் பலவீனங்களை அணுகும்போது, மேற்சொன்ன நற்பண்புகளே நம்மை வழிநடத்தவேண்டும். ஒருவரது நம்பிக்கை மற்றும் உண்மையான மனமாற்றம் குறித்த இறுதித்தீர்ப்பு எல்லாம் வல்ல இறைவனுடையதாகவே இருக்கவேண்டும்.
இந்நிலையில் கருணை காண்பித்து அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நான் சவுதி அரேபிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.




