அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு முன் ஹோர்முஸ் திறப்பு – ஈரான் புதிய முன்மொழிவு
அணுசக்தி பேச்சுவார்த்தைகளை பின்னர் நடத்தி, முதலில் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைத் திறப்பதற்கான முன்மொழிவை ஈரான் வைத்துள்ளதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்துக்கு பெயர் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்த அந்த அதிகாரி, அமெரிக்கா ஈரான் மீதான முற்றுகை மற்றும் தடைகளை தளர்த்த வேண்டும் என்பதும், அதே நேரத்தில் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் பின்னர் நடைபெற வேண்டும் என்பதும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என அவர் தெரிவித்தார்.
இந்த புதிய அணுகுமுறை, ஒரு உடன்பாட்டை எளிதாக்கும் நோக்கில் தெஹ்ரான் எடுத்துள்ள முக்கிய மாற்றமாக கருதப்படுவதாக அவர் கூறினார்.
மிகவும் சிக்கலான அணுசக்தி விவகாரம் இறுதி கட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முதலில் சாதகமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மத்தியஸ்தர்கள் மூலம் இந்த முறையான முன்மொழிவு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த முன்மொழிவின் கீழ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தாது என்ற உத்தரவாதத்துடன் போர் முடிவுக்கு வர வேண்டும்.
அதற்குப் பதிலாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும், பின்னர் அமெரிக்கா தனது முற்றுகையை விலக்கிக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Trump) இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.





