வடக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களுக்கு மறியல்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்படையினரால் நேற்றுப் மாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்றுக் காலை மீன்பிடி இழுவைப் படகு ஒன்றில் கடலுக்குச் சென்ற 9 மீனவர்களும் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த நிலையிலேயே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் இன்று காலை மன்னார் மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
அவர்களைத் திணைக்கள அதிகாரிகள் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, வழக்கை விசாரித்த நீதிவான் மேற்படி மீனவர்களை ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.




