காங்கோவிற்கு பயணித்த வெளிநாட்டினர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
எபோலா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளிநாட்டவரும் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளின் நுழைவைக் கட்டுப்படுத்துவது, கனடியர்களுக்கான பொது சுகாதார அபாயங்களைக் குறைக்கக்கூடும்” என்று கூறியுள்ளது.
இந்த நடவடிக்கைகள், ஜூலை 20, முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எபோலா பரவலைக் கட்டுப்படுத்த காங்கோ போராடி வருகின்ற நிலையில், காங்கோவுடன் பயண அல்லது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று WHO உலக நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் களங்கத்தை ஏற்படுத்துவதாகவும், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதை மேலும் கடினமாக்கும் என்றும் ஐ.நா. சுகாதார அமைப்பு கூறுகிறது.





