இரும்பு ஆலையில் தீ விபத்து: 9 தொழிலாளர்கள் பலி!
ஆந்திராவின் விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை 4.15 மணிக்கு, எஸ்எம்எஸ் -2 கிடங்கில் இருந்து எஸ்டிசி – 3 க்கு 1500 டிகிரி வெப்பத்தில் உருக்கிய இரும்பு குழம்பை ராட்சத பக்கெட் மூலம் இடமாற்றும் பணி நடந்து கொண்டிருந்தது.
இதன்போது எவருமே எதிர்பாராத வகையில் அந்த இரும்பு பிழம்பு வெடித்துச் சிதறியது.
இந்த கோர விபத்தில மொத்தம் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே நேரத்தில் தீப்பிழம்பு உருகி விழுந்து மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர், பொலிஸார் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்.





