போர் அச்சம் – வங்கியில் இருந்து பணத்தை மீளப் பெறும் ரஷ்ய மக்கள்
ரஷ்ய மக்கள் வங்கிகளில் வைப்பிட்டுள்ள பணத்தை மீளப் பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், சுமார் €24.4 பில்லியன் தொகையைத் மக்கள் திரும்பப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போருக்கு நிதியளிப்பதற்காக கிரெம்ளின் தனியார் வைப்புத்தொகைகளை முடக்கவோ அல்லது தேசியமயமாக்கவோ கூடும் என்ற அச்சம் பரவியதால் மக்கள் இவ்வாறு பணத்தை மீளப் பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Banks.ru நிதிச் சந்தையின் தரவுகளின்படி, பணத்திற்கான தேவை மார்ச் மாத தொடக்கத்தில் உயரத் தொடங்கி, தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சுமார் 300 பில்லியன் ரூபிள்கள் (€3.05 பில்லியன்) வங்கிக் கணக்குகளிலிருந்து வெளியேறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏழு பெரிய வங்கிகளில் ஐந்து வங்கிகள், தனிநபர்களின் வைப்புத்தொகையிலிருந்து நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய காஸ்ப்ரோம்பேங்க் Gazprombank இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களில் அது தனது மொத்த வைப்புத்தொகையில் 10.8 சதவீதத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரோசெல்ஹோஸ்பேங்க் Rosselkhozbank 270.5 பில்லியன் ரூபிள்களை (€2.75 பில்லியன்) இழந்தது, இது 15 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியாகும்.
ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் நிறுவனமான ஆல்ஃபா-பேங்க், 179.4 பில்லியன் ரூபிள்களை (€1.82 பில்லியன்) அல்லது அதன் வைப்புத்தொகையில் 5.6 சதவீதத்தை இழந்துள்ளது.
சோவ்கோம்பேங்க் Sovcombank மற்றும் விடிபி ஆகியவை முறையே 81.7 பில்லியன் ரூபிள்கள் (€830 மில்லியன்) மற்றும் 20.4 பில்லியன் ரூபிள்கள் (€207 மில்லியன்) கூடுதல் வெளியேற்றத்தைப் பதிவு செய்துள்ளன.
ரஷ்ய வங்கியின்படி, புழக்கத்தில் உள்ள மொத்தப் பணத்தின் அளவு ஜூலை மாதத்தில் மட்டும் 643.4 பில்லியன் ரூபிள்கள் (€6.53 பில்லியன்) உயர்ந்துள்ளது, இது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஏற்பட்ட மிகப்பெரிய மாதாந்திர அதிகரிப்பாகும். ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில், மேலும் 300 பில்லியன் ரூபிள்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




