திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சத்தியப் பிரமாண நிகழ்வு
“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரம்” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (27) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்புடன் நேர்மை சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், பொதுமக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அரச சேவையை வழங்குவதற்கான உறுதிமொழியை அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர்.
அரச சேவையில் நல்லாட்சியை வலுப்படுத்துதல், நேர்மைக் கலாசாரத்தை நிலைநிறுத்துதல், ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதுடன், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதே இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.





